Friday, October 9, 2009

கண்ணாமூச்சி ஆட்டம்!

எத்தனை நாளைக்குத் தான்
இந்த கண்ணாமூச்சி ஆட்டம்!?

நான் வரும் போது
நீ மறைவதும்…
விழிகள் சந்தித்தால்
திரும்பிக் கொள்வதும்…

எது வரை செல்ல உத்தேசம்!?

என் மனம் தெரிந்தும்
ஏனடா நடிக்கிறாய்!?

பார்த்த அன்றிலிருந்து
நெஞ்சில் நீக்கமற நிறைந்து விட்டாய்!
உனக்கும் நான்
அப்படித் தான் என்று தெரிகிறது!…

ஆனாலும்
ஏதோ…
ஏனோ...
ஒரு விலகல்!
எதற்காக!?...

பெண்...
நான் எப்படியடா
உடைத்துச் சொல்வேன்!?...

நீயாய் இதயம் திறப்பதற்கு என்ன!?...
உன் இதழ் அசைத்து
"நேசிக்கிறேன்!" என்றொரு
வார்த்தை உதிர்ப்பதற்கு என்ன!?

நெஞ்சம் நிறைந்திருக்கும் உன்னோடு
தினமும் இப்படிச் சண்டை போடுகிறேன்!...
நேரில் பார்க்கும் போதோ
வார்த்தைகள் தொண்டைக் குழியில்
வழுக்கி விழுகிறது!

உயிரின் அவஸ்த்தை!

இன்னும் எத்தனை நாளைக்குத் தான்
இந்த நாடகம்!?...

வலுக் கட்டாயமாய்
உதட்டில் பூசிய புன்னகையும்…
பிடிவாதமாய் இழுத்து வைத்திருக்கும்
அலட்சியப் போக்கும்…
எத்தனை நாளைக்கு!?

உனது திமிரை அடக்குவேன் என்றாய்!...
அதைத் திமிர் என்று
இன்னமும் நான் நினைக்கவில்லைத் தான்
ஆனாலும்
மீண்டும் மீண்டும் விழுந்த அடிகளில்
அனைத்தும் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டது!

சிறிது சிறிதாய் வளர்த்து விட்ட
நேசம் எல்லாம் வெறும் வேஷம் என்றாய்!...
இதயம் நிறைந்த காதலை
இனக்கவர்ச்சி என்றாய்!...
வார்த்தைகளால் கடித்துக் குதறினாய்!...
அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்!

கொஞ்சம் கொஞ்சமாய் விலகி
இறுதியில் முழுவதும் முறித்துக் கொண்டாய்!

“மறந்து விடு!”
இறுதியாய் நீ சொன்ன வார்த்தைகள்!
எவ்வளவோ முயன்றும்
அந்த வார்த்தைகளைக் கூட
மறக்க முடியவில்லையே...
இதில் உன்னை மறப்பதெப்படி!?...

மீண்டும் மீண்டும்
உன் நினைவைத் தூண்டும்
இடமே வேண்டாம் என்று
விலகி வந்தேனே…
இங்கும் எப்படியடா வந்தாய்!?

ஈரிரண்டு வசந்தங்கள்!...
வெறும் பாலைவனமாய்க் கடந்த
ஈரிரண்டு வசந்தங்களின் முன் பார்த்த
அதே மந்தகாசப் புன்னகை!...
அதே மயக்கும் விழிகள்!...
அதே சுடு சொற்கள்!...

உலகம் சிறியது தான்!...
ஆனாலும்
இப்படியா
சுருங்கிப் போக வேண்டும்!?...

சாதாரணமாய் நடிப்பதே
கஷ்டமாய் இருக்கும் போது,
உன்னைப் பார்த்ததும்
கண்ணைக் கரித்துக் கொண்டு வரும்
கண்ணீரை அடக்கி நடிப்பது
நரக வேதனை!

மறக்கத்தான் முடியவில்லை,
ஒதுக்கியாவது வைப்போம் என்று
இதயத்தின் மூலையில் போட்டு வைத்த
உனது நினைவுகள் எல்லாம்
இன்று பேயாட்டம் போடுகின்றன!!!

இதற்க்கு ஒரு முடிவே இல்லையா!?...
விலகவும் முடியாமல்,
விலக்கவும் முடியாமல்
நான் படும் அவஸ்த்தையை
நீ அறியவே மாட்டாயா!?

என் துன்பங்கள்!.......

ஆசைகள் எல்லாம்
மழைத் துளி பட்ட மணல் வீடாய்
உடைந்து போகின்றது!...
தாங்க முடியவில்லையே அன்பே…..

நட்பு முதல்
நான் வளர்த்த காதல் வரை
அனைத்துமே எனது உரிமைகளை
பறிப்பது போல் தோன்றுகிறது….

எங்கு பார்த்தாலும் முட்டுக்கட்டைகள்…..
எங்கு பார்த்தாலும் தடைகற்கள்…..
வாழ்க்கை விடியா இருளுக்குள்
முழ்கிக் கொண்டிருக்கிறது!….

ரொம்ப நாளைக்கு பின்
இன்று தான் கொஞ்சம் சிரித்தேன்…
அந்த சின்ன சந்தோசம் கூட
கடவுளுக்கு பொறுக்கவில்லையா!?.......

நான் செய்தது தப்பு தான்
மறுக்கவில்லை……
அதற்கு தண்டனை குடு என்று கேட்டதும்
உண்மை தான்…….

ஆனால் எவ்வளவு தான் தாங்குவது!?....
எவ்வளவு தான்
ஒன்றுமே நடவாதது போல் நடிப்பது!?......
எதற்கும் ஒரு எல்லை உண்டு தானே…..

எல்லாம் நல்லதற்கு தான் என்று
எவ்வளவு நாள் தான் பொறுப்பது!?
சிறிது சிறிதாய்
அனைவரும் வேற்றுமையாகிப் போய்
இறுதியில் நான் மட்டும்
தனித்து விடப் படும் போதாவது
இந்தத் துன்பங்கள் தீருமா!?.......

அன்பே!?.....

முகம் பார்த்ததும்
அகம் தொலையும் என்பதில் எல்லாம்
எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை!....
அன்று உன்னைப் பார்க்கும் வரை!

முழு வெள்ளையில்
கையில் ஒற்றை ரோஜாவுடன்
துரத்தில் வந்த என்னை
அடையாளம் கண்டு சிரித்தாயே….
அப்போது தான் என் மனது
லேசாய் ஆட்டம் கண்டது!

அருகில் வந்ததும்
ரோஜாவை நீட்டிய படி
லேசாய் குனிந்து
“நான் உன்னை நேசிக்கிறேன் கண்மணி!”
என்ற போதோ முழுதாய் விழுந்து விட்டது!

அதற்கு முன்பும்
எத்தனையோ முறை
பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
சண்டை கூடப் போட்டதுண்டு!
அப்போதெல்லாம் நானாய் இருந்த நான்
நீ நேசிப்பதாய் சொன்ன நொடியிலிருந்து
வேற்றாளாய்ப் போனேன்!

என்ன தான் “ஒன்றுமே இல்லை!” என்று
தலையைத் திருப்பிக் கொண்டாலும்
உள்ளத்திலிருக்கும் உண்மை
மாறாதல்லவா!

விலகி விலகிப் போனாலும்
என் உள்ளம்
ஓடி ஓடிப் போய்
உன்னைக் கட்டிக் கொள்வதைத்
தடுக்க முடியவில்லை!

சிறிதாய் விழுந்த காதல் வித்து
கப்பும் கிளையும் விட்டு
ஆல மரமாய்
என்னுள் வளர்ந்து நிற்கிறது!

அன்று மறுத்த போது
காத்திருப்பேன் என்று சொல்லிப் போனாயே....
இப்போதும் காத்திருக்கிறாயா
அல்லது
மறந்து விட்டாயா!?....

கலைந்து போய் விடும் கனவுகள்!

ஆசைகள் எல்லாமே
வெறும் கனவுகள் தான்!.......
எப்போதுமே வெகு இலகுவாய்க்
கலைந்து போய் விடுகிறது!!!!!

வளர்க்கும் போதும், வளரும் போதும்
மிக இதமாய் தான் இருந்தது....
உடைந்து சிதறும் பொது தான் தெரிகிறது,
அது சென்ற ஆழம் எல்லாம்!!!

அதிர்ஷ்டம் அருகில் வராது என்று தெரிந்தே
பெருகும் ஆசைகளை
என்ன செய்வதென்று தெரியவில்லை!

என்னாலான ஒரு சின்ன முயற்சியாய்
கண்களோடு, மனதையும் சேர்த்து
மூடிக் கொள்கிறேன்!
இருந்தும் சில சமயங்களில்
இதயம் விழுந்து விடுகிறதே!.....

என்ன பட்டும் அறிவிற்குப் புரிவதே இல்லை.....
மனதிற்கு இறக்கையைக் கட்டி விட்டு
வாயை மூடிக் கொள்கிறது!
அதனால் மனம் படும்காயங்களும்,
அனுபவிக்கும் அவஸ்தைகளும்
அதற்கெங்கே புரியப் போகிறது!?......

பல நேரங்களில்
விழிநீர் கீழே சிந்தி விடாமல் காப்பதிலேயே
போதும் போதும் என்றாகி விடுகிறது....
இதில் வேதனையை வேறு
மறைக்க வேண்டும் என்றால்
எப்படித் தான் சமாளிப்பது!?....