Friday, June 27, 2008

புலம்பல்! (படித்ததில் பிடித்தது)

இருப்பவனுகோ
வந்து விட ஆசை!
வந்தவனுக்கோ
சென்று விட ஆசை!

இதோ அயல் தேசத்து
ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அழைப்புகளோடும்
வருகின்ற கடிதங்களை நினைத்து
பரிதாப படதான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
வாசனை இருக்கலாம்!...
ஆனால் வாழ்க்கையில்?.......

தூக்கம் விற்ற காசில் தான்
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே
இளமையை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்
ஓரு விமான பயணத்தினூடே
விற்று விட்டு
கனவுகள் புதைந்துவிடுமென தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கின்றோம்!!!

மர உச்சியில் நின்று
ஓரு தேன் கூட்டை கலைப்பவன் போல...
வார விடுமுறையில் தான்
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!...
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!!!

பழகிய வீதிகள்...
பழகிய நண்பர்கள்...
கல்லூரி நாட்கள்...
தினமும்
ஓரு இரவு நேர கனவுக்குள்
வந்து வந்து காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்!...
மாட்டுவண்டி பயணம்!...
நோன்புநேரத்து கஞ்சி!...
பம்பரம்-சீட்டு-கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!...
ஓவ்வொரு ஞாயிற்று கிழமையாய்
எதிர்பார்த்து விளையாடி மகிழ்ந்த
உள்ளூர் உலககோப்பை கிரிக்கெட்!...

இவைகளை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்
விசாவும் பாஸ்போட்டும் வந்து
விழிகளை நனைத்து விடுகிறது!!!....

வீதிகளில் ஓன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில்
மாப்பிள்ளை அலங்காரம்!...
கூடி நின்று கிண்டலடித்தல்!

கல்யாண நேரத்து பரபரப்பு!...
பழைய சடங்குகள்!...
மறுத்து போராட்டம்!...
பெண் வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!...

சாப்பாடு பரிமாறும் நேரம்
எனக்கு நிச்சயத்தவளின் ஓரப்பார்வை!...
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!...

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்!"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு.....

ஓரு தொலைபேசி வாழ்த்துனூடே
தொலந்து விடுகிறது எங்களின்
நீ......ண்ட நட்பு!!!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?...
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள் தான்!!!

காற்றிலும் கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின், நண்பர்களின்
மரணச் செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும் தான்
ஆறுதல் தருகிறது!.....

இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத் தாண்டிய கண்ணீரிலையே
கரைந்து விடுகிறார்கள்!

இறுதி நாள் நம்பிக்கையில் தான்...
இதயம் சமாதானப்படுகிறது!!!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்!...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்...
முதல் பார்வை...
முதல் பேச்சு...
இவற்றின் பாக்கியத்தை
"றியாழும்", "தினாரும்"
தந்துவிடுமா????

கிள்ளச் சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ????....

ஓவ்வொறு முறை
ஊருக்கு வரும் பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாசப் பார்வை!...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு!...

இப்படி புதிய முகங்களின்
எதிர் நோக்குதலையும்...
பழைய முகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும் அயல்தேசம் செல்ல மறுத்து
அடம் பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
வீட்டு கஸ்டங்களும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பி விடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!!!!......

No comments: